அவளது விடைகள்...
அவள் செய்வதறியாமல், இருண்ட இடங்களில் தனது விடைகளைத் தேடிக்கொண்டிருந்தாள்...
இன்னும் அதை உன்னால் கண்டுபிடிக்க முடியவில்லையெனில், நீ அவளை விட்டு விலக நேரம்வந்துவிட்டது,
நிரந்தரமாக..!
இருந்தும் கூட, நீ அவளை விட்டு விலகாமல் அவ்விடைகளைத் தேடிக்கொண்டிருந்தாய். எனக்கு மகிழ்ச்சி தான்.
ஆனால், தேடும் வேளையில் நீ ஒன்றை மறந்துவிட்டாய்.
நீ தான் அவளது விடைகள்...
ஏன், நீ தான் அவளது கேள்விகளும் கூட..!
இக்கேள்விகளும் விடைகளும் அவளது வாழ்வின் இன்பத்தைக் கண்டறியத் தான்.
ஆனால், நீ தான் அவளது பேரின்பம் என்பதை எப்போது தான் நீ உணர்வாய்?
அவள், உன்னைப் பேசச் சொன்னதும்,
உன்னைப் பேச வைத்ததும் இதைப் புரிய வைப்பதற்குத் தான்.
அவளது ஒலி வார்த்தைகள் தான் உனக்கு கேட்கவில்லை.
ஆனால், அவளது கரு விழிகள் இதையே தான் சத்தமிலாமல் உரைத்துக் கொண்டிருந்தது.
அதைக் கூட உன்னால் மொழி பெயர்க்க முடியவில்லையா?
இனி ஒருபோதும் அவள் உனது வாழ்க்கையில் வேண்டாம்.
வேண்டுமானால், உனது கழுத்திலிருக்கும் புதிதாகப் பூத்தப் பூவிலிருந்து
செய்யப்பட்ட மாலை வீசும் நறுமணத்தைப் போல,
அவளையும் அவளது நினைவுகளையும் சுவாசித்துக் கொள்.
ஆனால், ஒன்று உன் நினைவிலிருக்கட்டும். இந்த மணம் ஒருபோதும் நீ சுவாசிக்கும் காற்றாகாது. இதை நீ சொந்தமும்
கொள்ளமுடியாது.
மாலை கடைசியில் தூக்கி எறியப்படும். அதன் பூக்கள் வாடியே தீரும்.
இது தான் அவளது விருப்பமும் கூட.
இந்த இரவு புதிதாகப் பல கேள்விகளை எனக்குத் தந்துள்ளது. அதற்கான பதில்களைத் தேடவும் எனக்கு நேரம் வந்துவிட்டது.
இந்தக் கடைசி நொடியில் கூட நான் உன்னைக் கேட்க நினைப்பது ஒன்று தான், "என்னை நினைத்துக் கொண்டிருக்கிறாயா?"
உனது விடை எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.
ஆனால், எனக்கு "ஆம்" என்றே கேட்கும்.
நீ இதைப் பொய் என்றும் சொல்லலாம். அது ஒரு பக்கம் இருக்கட்டும். நமது உறவும் இனி பொய் தானே?!
எனக்காக நீ வருத்தப்படாதே. எனக்கென்றே ஒரு புதிய உலகத்தை உருவாக்கி வைத்துள்ளேன்.
அதில் உன்னை நான் எளிதாகப் பார்க்க முடியும். அதில் நம் பந்தம் மாறாமல் அப்படியே தான் இருக்கும்.
ஆனால், அதிலும் கூட உன்னால் எனது கேள்விக்கு விடையளிக்க முடியாது தான்.
பரவாயில்லை.
ஒவ்வொரு நொடி கடக்கக் கடக்க,
நீ மாறலாம். நான் மாறலாம். நமது பந்தம் மாறலாம்.
நீ என்னை இழக்கலாம். நான் உன்னையும் இழக்கலாம்.
நம் இருவரையும் நமது அன்பு இழக்கலாம்.
நாம் சூரியன் உதிப்பதைப் பார்த்து வியக்கலாம். அது மறைவதைப் பார்த்தும் மயங்கலாம்.
ஆனால் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்க்க முடியாது .
அது போலத் தான் நாமும். நமது அன்பும்.
அவளது கரு விழிகளும் இதையே தான் சத்தமிலாமல் உரைத்துக் கொண்டிருந்தது!
இப்போதும்!!
0 comments:
Post a Comment