மனிதம் | Human Pets.
அத்தியாவச செலவுகளுக்குத் தடை பெரிதாக இல்லாத நகரத்து வீடுகளில் பெரும்பாலும் ஒரு செல்லப் பிராணியைப் பார்க்கலாம்.
நாயை தவிர்த்துப் பூனை, Love birds, கிளி போன்ற பிராணிகள் இந்தப் பட்டியலில் அடங்கும்.
குழந்தைகள் தனியாக வளர்வதுடன் ஒரு செல்லப் பிராணியோடு வளர்ந்தால், அவர்களுக்கு அன்பு, குடும்பத்தின் அருமை, ஒவ்வொரு உயிருக்கான முக்கியத்துவம் போன்ற மனிதக் கூற்று அடிமனதில் நன்றாகப் பதிவதோடு அதில் கிடைக்கும் சந்தோஷத்தையும் உணர்ந்து அவர்கள் பிற்காலத்தில் சரிவர வாழ்வர் என்கிறது ஓர் ஆராய்ச்சி.
தனிக் குடும்பம், வீட்டிற்கு ஒரே பிள்ளை போன்ற குடும்ப 'வளர்ச்சி'க்கு இது போன்ற புதிய ஆராய்ச்சிகள் ஒரு கைத்தடியாக உதவும் என்பது ஒருபக்கம் மகிழ்ச்சியளித்தாலும், இதில் ஒரு மறுபக்கம் ஒளிந்திருக்கிறது.
நகரங்களில், குறைந்தபட்சம் வீட்டிற்கு 3 நபர்கள் வாழ்கின்றனர். (தாய்-தந்தை-பிள்ளை) ஆனால், இந்த மூன்று நபர்களிடமே பேச்சு என்பது குறைவாகக் காணமுடிகிறது. பெரும்பாலும் இரு பெற்றோரும் வேலைப் பார்க்க, வீட்டிற்கு வந்தவுடன் அவர்களுக்குத் தெரிவது இரண்டு விஷயங்கள் தான்.
1. அலுவலகத்தில் விட்டுப் போன வேலைகளை முடிப்பது.
2. அயராத உறக்கம்.
இந்த இரண்டிலும், ஒன்றை மட்டும் தான் செய்ய முடியும். உறக்கம் எடுத்தால் விட்டுப்போன வேலைகளைச் செய்ய முடியாது. வேலையைச் செய்தால் சரியான உறக்கம் கிடைக்காது. இவை இரண்டுமே, வாழ்க்கைச் சக்கரமாக நகர, எவ்வாறு அவர்கள் பிள்ளையோடு பேசுவார்கள்?!?
இந்தத் தடைகளையும் தாண்டி, பெற்றோர்கள் தங்கள் பிள்ளையிடம் பேசினால் கடைசியில் விளைவது பிரச்சனைதான்!
ஆம். தாங்கள் சொல்வது அப்படியே அச்சு அசலாகத் தங்கள் பிள்ளை கேட்க வேண்டும் என்பது அவர்களது எதிர்பார்ப்பு. குழந்தைகள் என்ன நம் கையில் கதறும் 'smart'போனா? அல்லது மேஜையில் அழுகும் கம்ப்யூட்டரா? நாம் சொல்வதை அப்படியே கேட்டு நடப்பதற்கு. இருக்கிற அலுவலகப் பிரச்சனை போதாது என்பதால் தற்போதைய 'Young' ஜென் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் பேசுவதைக் குறைத்துவிட்டனர். அதற்கு மாற்றாகத் தங்கள் செல்லப் பிராணிகளிடம் தங்கள் அன்பையும் பாசத்தையும் பொழிகிறார்கள்.
Chainயில் தன்னை அடக்கி, ஒரு சிறு இடத்தின் மூலையில், பெரும்பாலான பிராணிகள் தங்கள் வாழ்க்கையைக் கழிப்பது ஒரு தனிச் சோகக் கதை!
இருப்பினும், மனிதனுக்கும் பிராணிக்குமான பந்தம் மனிதன் விருப்பப்படியே அமைந்துவிடுகிறது. மனிதன் தன் செல்லப் பிராணியோடு பழகுவதை உன்னிப்பாகக் கவனிக்கும் போது, அன்பான வார்த்தைகள், சந்தோஷமான முகபாவங்களோடு பழகுகிறான். ஆனால் அதே மனிதன், தனது குடும்பத்தாரோடு இன்றைய சூழலில் பழகும் போது இவை அனைத்தும் தலை கீழாகிறது. இன்றைய நகரத்துக் குடும்பத்தில் இதை நன்கு உணரலாம்.
இதெல்லாம் ஒரு பிரச்சனையா? என்பவர்களுக்கு என்னிடம் ஒரு விளக்கமிருக்கிறது.
எங்கு நமது சந்தோஷத்தையும் துக்கத்தையும் பகிர முடியவில்லையோ, அங்கு அழுத்தமும் வெறுமையும் நம்முள் ஏற்படுகிறது. இதனால் நம் தினசரி வேளைகளில் கவனம் சிதறும் . ஆக எதிர்பார்த்த விளைவுகளை அடையாமல் ஏமாற்றம் உருவாகும். ஏமாற்றம் துக்கத்திற்கு வழிவகுக்கும். இந்தத் துக்கம் நாளடைவில் கோபமாக மாறும். இது மற்றவர்களோடு பழகும் போது நம்மையே அறியாமல் பிரதிபலிக்கும். ஆரம்பத்தில் இதற்காக நாம் வருந்துவோம். பின்பு இதுவே ஒரு பழக்கமாகிவிடும்.
சிறு சிறு சந்தோஷங்களையும் துக்கங்களையும் பகிர்ந்து, குழந்தைகளின் மன நிலையைப் புரிந்து அமைக்கப்படும் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை தான் ஒரு செழிப்பான குடும்பத்தை உருவாக்கும். அப்போது தான் ஒரு தரமான சமுதாயம் மலரும்.
0 comments:
Post a Comment