Sri Kachaleeswarar Temple | ஸ்ரீகச்சாலீஸ்வரர் கோயில் | Sakthi Vikatan | சக்தி விகடன்
ஸ்ரீதுர்கையை வழிபடுவோம்!
தோஷம் விலகும், சந்தோஷம் பெருகும்...
சென்னை, பாரிமுனை அருகில் உள்ள அரண்மனைக்கார வீதியில் இருக்கும் ஸ்ரீகச்சாலீஸ்வரர் கோயிலில், சிவபெருமான்தான் மூலவர் என்றாலும், அங்கே கோஷ்டத்தில் கொலுவிருக்கும் ஸ்ரீதுர்கை அம்மனே அருளாட்சி நடத்துகிறாள்.
இங்கு ஸ்ரீதுர்கையின் உத்ஸவத் திருக்கோலம் கொள்ளை அழகு! கும்பகோணம் பட்டீஸ்வரத்தில் உள்ள ஸ்ரீதுர்கைக்கு அடுத்தபடி, இங்கே உள்ள ஸ்ரீதுர்கைக்கு உத்ஸவ மூர்த்தம் இருப்பது சிறப்பு என்கின்றனர் பக்தர்கள்.
சூரிய பகவான் தன் இரண்டு மனைவியரான உஷா, பிரத்யுஷாவுடன் இங்கே காட்சி தருகிறார். கோயிலின் விமானத்தில், 27 நட்சத்திரங்களுக்கான தெய்வங்களின் திருவிக்கிரகங்கள் காட்சி தருகின்றன.
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், ஸ்ரீதுர்கை அம்மனுக்கு விளக்கு ஏற்றி, அர்ச்சனை செய்து, ஒன்பது முறை பிராகார வலம் வந்து வழிபட்டால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்குக் குழந்தை வரம் கிட்டும் என்பது ஐதீகம்.
கார்த்திகை மற்றும் தேய்பிறை நவமி அன்று காலையில் இங்கு ஸ்ரீதுர்கா சண்டி ஹோமம் விமரிசையாக நடைபெறும். இதில் கலந்துகொண்டால், ஸ்ரீதுர்கையின் பேரருளைப் பெறலாம்! ராகு- கேது பெயர்ச்சியின்போது இங்கே உள்ள ஸ்ரீதுர்கைக்கும், சித்தி-புத்தி சமேத ஸ்ரீபஞ்சமுக விநாயகருக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டால், சகல நன்மைகளும் கைகூடும் என்று சிலாகிக்கின்றனர் பக்தர்கள்.
- செ.கிஸோர் பிரசாத் கிரண்
படங்கள்: பா.ஓவியா
0 comments:
Post a Comment